புதன், 4 நவம்பர், 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்’

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்

லேபிள்கள்:

சரியை, கிரியை, யோகம், ஞானம்

பேரின்பத்தை உணர்வதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன.

*சரியை மார்க்கம்

*கிரியை மார்க்கம்

*யோக மார்க்கம்

*ஞான மார்க்கம்

சரியை மார்க்கம்: சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை மார்க்கம்’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.

கல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.

கிரியை மார்க்கம்

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.

சிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.

அடுத்தது யோக மார்க்கம்,

ஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.

இது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.

உண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.



அடுத்தது ஞானமார்க்கம். எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் ’கனி’ எனப் பாராட்டுவார்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ என்பது அவரது கருத்து.

ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா?

வற்றாத அன்பு,

குறையாத ஆனந்தம்,

கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,

குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,

கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்

இவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.

திருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும். காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனை ஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.

மன இறுக்கத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதா? அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா? இந்த மார்க்கத்தை உணர வாய்ப்பே இல்லை.

எல்லாம் வல்ல இறையாற்றலை மானசீகமாக சரணடைவதைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்க கூச வேண்டும்.

இந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில் இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)

’சரியையிலே ஈசன்

சட வடிவாய் நிற்பான்

கிரியையிலே மந்திரத்தில்

கிட்டி அருகிருப்பான்

ஊனமில்லா யோகத்தில்

உள் ஒளியாய் நிற்பான்

ஞானத்தில் தானாகுவான்!’

ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.

இவ்வளவுதான் ஆன்மீகம், இதை மையமாக வைத்துப் பார்த்தால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும் விளக்கம் இவற்றிற்குள் நன்கு பொருந்தி வருவதை உணரலாம்.


நன்றி: கவனகர் முழக்கம் ஆகஸ்ட் 2002

லேபிள்கள்: , , ,